அரசியல்

மதுவை தடை செய்தால் என்னாகும்..?

போதையின் பாதை முடிவதில்லை

கள்ளச்சாராய மரணங்கள் நடக்கும் நேரங்களில் எல்லாம் பூரண மதுவிலக்கு என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் எழுப்புவதுண்டு. ஆளும் கட்சி அதை சமாளித்து சப்பைக் கட்டும். உண்மையில் இன்றைய சூழலில் மது விலக்கு சாத்தியமா என்பதே கேள்விக்குறியாக மாறிவிட்டது.

காலகாலமாக மனிதர்கள் மது குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். காலம் காலமாக சிலர் மதுவை எதிர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அளவோடு குடிப்பவர்கள் இருப்பது போன்று மது இருந்தாலும் கள்ளச்சாராயம் தேடுபவர்களும் இருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்ததே சமூகம்.

அரசு விற்கவில்லை என்றால் தனியார் விற்பனை செய்வார்கள் என்பதே யதார்த்தம். இப்போதும் மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில் மது குடிப்பதற்கென சில இடங்களை ஒதுக்கித்தான் வைத்திருக்கிறார்கள். இங்கே தெருவுக்குத் தெரு இருக்கிறது என்றால், அங்கே ஊருக்கு வெளியே இருக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம்.

ஆகவே, இது அரசியல் அக்கப்போர் மட்டுமே. இன்று சட்டசபையில் துரைமுருகன், ’பலரும் பூரண மதுவிலக்கு பற்றி பேசுகின்றனர், ஆனால் அப்போதே கருணாநிதி கூறியிருந்தார்; கர்நாடகா,கேரளா, ஆந்திரா,புதுச்சேரி என சுற்றி இருக்கும் மாநிலங்களில் மதுவிற்கும் போது தமிழ்நாடு மட்டும் எப்படி பற்றிக் கொள்ளாத கற்பூரமாக பாதுகாக்கப்பட முடியும்?

உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. ஆனால் அரசாங்கம் விற்கும் மதுவில் அவர்களுக்கு தேவையான கிக் இல்லாததால், கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர். அரசாங்கம் விற்கும் சரக்கு அவர்களுக்கு SOFT DRINK போல மாறிவிடுகிறது. எனவே விட்டில் பூச்சி விளக்கில் போய் விழுவதை போன்று விழுந்து செத்து விடுகின்றனர். அதற்காக தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியாது. மனிதனாய் பார்த்துத் தான் திருந்த வேண்டும். கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என்று கூட சட்டம் இயற்றலாம். ஆனால் எல்லாத்துக்கும் ஒரு நியாயம் இருக்க வேண்டும்; நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், பா.ம.க. தலைவர் அண்புமணி, ‘’தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது’’ என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி அவர்களும், “உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர்’’ என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் கூறியிருக்கின்றனர்.

அமைச்சர்களின் கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே அமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் இல்லை என்று கூறியிருக்கிறார்.

அதன் பொருள் என்னவென்று தெரியவில்லை. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த எந்த சூழலும் தேவையில்லை. நாட்டு மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதுமானது. அந்த எண்ணம் இருந்தால் ஒரே ஆணையில் மதுவிலக்கை அறிவித்து, நாளை முதல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியும்.

ஆனால், மது ஆலை அதிபர்களின் ஆதரவைப் பெற்ற திமுக அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடினால் அண்டை மாநிலங்களில் இருந்து மது உள்ளே வந்து விடும்; கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற புளித்துப் போன காரணங்களைக் கூறியே மதுவிலக்கை தள்ளிப்போடக் கூடாது. தமிழ்நாட்டில் சுமார் ஐந்தாயிரம் மதுக்கடைகள் இருக்கும்போதே மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இது அரசின் தோல்வியே தவிர, இதற்கு வேறு காரணங்கள் இல்லை.

அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் இருந்தாலும் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் மது வராமல் தடுக்க வேண்டியதும், கள்ளச்சாராய வணிகத்தை தடுக்க வேண்டியதும் அரசின் அடிப்படைக் கடமைகள். அதற்காகத் தான் காவல்துறை என்ற அமைப்பும், அதில் மதுவிலக்குப் பிரிவு என்ற துணை அமைப்பும் உள்ளன. தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டாலும் அது குறித்து அடுத்த 5 நிமிடங்களுக்குள் அரசுக்கு தகவல் கிடைக்கும் வகையில் காவலர்கள், கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என வலிமையான கட்டமைப்பு அரசிடம் உள்ளது. இவ்வளவையும் வைத்துக் கொண்டு அண்டை மாநிலங்களில் இருந்து மது வருவதையும், கள்ளச்சாராயத்தையும் தடுக்க முடியாவிட்டால் அது அரசின் இயலாமை தான்.

மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும். அரசு அதன் வருவாய்க்காகவும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்தும் மது ஆலைகள் செழிக்க வேண்டும் என்பதற்காகவும் மதுக்கடைகளை தெருவுக்குத் தெரு திறந்து விட்டு, உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை என்று உழைக்கும் மக்களின் மீது பழியை சுமத்துவது கண்டிக்கத்தக்கது. அதிலும் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களே சற்றும் சமூகப் பொறுப்பு இல்லாமல் இப்படி பேசுவது நியாயமல்ல. மதுவால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இரு லட்சம் பேர் உயிரிழப்பதை விட சிறிது நேரம் அசதியாக இருப்பது எவ்வளவோ மேல். எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…’’ என்கிறார்.

சரி, இதையே அவர் ஆதரவு கொடுத்திருக்கும் மோடியிடம் சொல்லி இந்தியா முழுக்க நடைமுறைப்படுத்தச் சொல்லலாம். குறைந்தபட்சம் பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரியில் மட்டுமாவது நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை என்றால் கூட்டணி இல்லை என்று அன்புமணி எச்சரிக்கை செய்யலாம்.

அதுவெல்லாம் செய்யவே மாட்டார்கள். சும்மா ஒரு கருத்துக்காக ஆளும் கட்சியை எதிர்ப்பது மட்டுமே எதிர்க்கட்சிகளின் வேலை. அம்புட்டுத்தான். பூரண மதுவிலக்கை நாளை பா.ம.க. வந்தாலும் நடைமுறைப்படுத்தாது என்பதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *