யாக்கை

பவதாரணியை பறித்த நோய்

  • ­கல்லீரல் புற்று நோய்

குயில் போல பாடிக்கொண்டிருந்த பவதாரணி இத்தனை இளம் வயதில் மரணத்தைத் தழுவுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. எக்கச்சக்க பணம், ஏகப்பட்ட செல்வாக்கு இருந்தும் பவதாரணியை காப்பாற்ற முடியாத கல்லீரல் புற்று நோய் பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம்.

மனித உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கக்கூடிய நோயாக புற்று நோய் உள்ளது. எந்த உறுப்பில் புற்று நோயின் பாதிப்பு தென்படுகிறதோ, அந்த உறுப்பின் பெயருடன் சேர்த்து புற்றுநோய் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் கல்லீரல் புற்று நோயை ஹெபடோசெல்லுலர் ஹார்சினோமா என்கிறார்கள். இதுவே, கல்லீரலில் உலகில் அதிகமான நபர்களை பாதிக்கும் புற்றுநோயாக இருக்கிறது.

இதையடுத்து சோலன்கியோ கார்சினோமா, லிவர் ஆஞ்சியோசர்காமா, ஹெபடோபிளாஸ்டோமா ஆகிய கல்லீரல் புற்றுநோய்கள் இருந்தாலும், இவை அரிதாகவே காணப்ப்படுகிறது.

கல்லீரல் கோளாறுகளில் மஞ்சள் காமாலைக்கு அடுத்தபடியாக கல்லீரல் புற்று நோயே உயிரை அதிகம் பாதிக்கிறது. பெண்களை விட ஆண்களே இந்த எச்.சி.சி. எனப்படும் கல்லீரல் புற்றுக்கு ஆளாகின்றனர். பொதுவாக 55 முதல் 65 வயதுடையவர்களிடம் இந்த நோய் அதிகம் கண்டறியப்படுகிறது. இந்த நோய் கண்டறிந்தவர்களில் சுமார் 20 சதவிகிதம் பேர் மட்டுமே ஐந்து ஆண்டுகளைத் தாண்டி உயிர் வாழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

புகையிலை ஒதுக்குவதால் வரும் வாய்ப்புற்று நோய் தவிர, எந்த ஒரு புற்று நோய்க்கும் மிகத் துல்லியமான காரணங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை. ஏனென்றால் பல்வேறு காரணங்கள் சேர்ந்தே புற்றுநோய் உருவாகிறது.

எல்லா வகையான புற்றுநோய்க்கும் மரபணு முக்கிய காரணியாக இருக்கிறது. குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருப்பது மற்றவர்களுக்கும் மரபணு மூலம் தொடர்கிறது. அதேபோல் மஞ்சள் காமாலை நோயும் கல்லீரல் புற்றுநோய்க்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. நீண்ட காலம் சிகிச்சை அளிக்கப்படாத ஹெபடைடிஸ் பி மற்றும் சி நோய் தொற்றுகளும் கல்லீரல் புற்று நோய்க்குக் காரணமாக அமைகின்றன. இப்படிப்பட்ட நோய்கள் காரணமாக கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு செல்களை சேதப்படுத்துகிறது. இது காலப்போக்கில் கல்லீரலில் புற்றுநோயாக மாற்றம் அடைகிறது.

பொதுவாக அதிகம் மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு எளிதில் உண்டாகிறது. இதன் காரணமாக கல்லீரலில் அலர்ஜி ஏற்பட்டு கல்லீரல் திசுக்கள் சேதமடைகின்றன. அதேபோல் நீண்ட காலம் மது அருந்துபவர்களுக்கு கல்லீரலில் கொழுப்பு அதிகம் படிவதன் காரணமாகவும் கல்லீரல் திசுக்கள் சேதமடைந்து புற்றுநோய் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு. கல்லீரலில் அதிகப்படியாக கொழுப்பு சேர்வதும் கல்லீரல் புற்று நோய்க்கு வழிவகுக்கிறது. கட்டுப்படுத்தபடாத நிரிழிவு நோயாளிகளுக்கும் கல்லீரல் புற்றுநோய் உண்டாகிறது.

சுற்றுச்சூழல் நச்சுக்கள் மற்றும் ரசாயன பாதிப்பின் காரணமாகவும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. தொழிற்சாலைகளில் உபயோகிக்கப்படும் வினைல் குளோரைடு மற்றும் அர்சனிக் போன்ற ரசாயனங்கள் புற்றுநோய் ஏற்படுத்துகிறது.

கல்லீரல் இழைநார் வளர்ச்சி அல்லது இறுதி நிலை கல்லீரல் சுருக்கம் என்றும் அழைக்கப்படும் சிரோசிஸ் என்பது கல்லீரல் நோயினால் ஏற்படும் சேதத்தின் காரணமாக ஃபைப்ரோஸிஸ் எனப்படும் வடுக்களை உருவாக்குகிறது. இது திசுக்களை மாற்றி, கல்லீரல் இழைநார் வளர்ச்சி ஏற்படுத்தி புற்றுநோயை உருவாக்கலாம்.  

பொதுவாகவே புற்றுநோய் ஆரம்பகாலத்தில் தெளிவான அறிகுறிகளைக் காட்டுவதில்லை. அதனாலே இதனை கண்டறிவது சிரமமாகிறது. திடீர் எடை இழப்பு, வாந்தி, அடிவயிற்றின் மேல் பகுதியில் வலி, பசியின்மை போன்றவை ஆரம்பகட்ட அறிகுறிகளாகத் தென்படுகிறது. அடுத்தகட்டமாக தோல் அரிப்பு, கால் வீக்கம், அடிவயிற்றில் திரவம் சேர்தல் போன்ற பிரச்னைகள் உருவாகி கல்லீரல் செயல்பாடு தடுமாற்றம் அடைகிறது.

இதனால் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச் சத்து போன்ற சத்துக்கள்  கல்லீரல் மூலமாக உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதேபோல் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதிலும் குளறுபடி ஏற்பட்டு கல்லீரல் சுருக்கம், கல்லீரல் பெருக்கம், கல்லீரல் அலர்ஜி போன்றவை உண்டாகிறது.

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கல்லீரலுக்கு ரத்தப்பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். கல்லீரல் பிரச்னைகளை ஆரம்ப கட்டத்திலேயே பிரச்னைகளைக் கண்டறிந்தால் மிக எளிதாக கல்லீரலையும் உயிரையும் பாதுகாக்க முடியும். கல்லீரல் முழுக்க கெட்டுப்போனவர்களுக்கு மாற்று கல்லீரல்தான் பொருத்த முடியும். நோயாளிக்கு பொருத்தமான கல்லீரல் கிடைப்பது சிரமம் என்பதுடன் இது அதிக செலவு வைக்கும் சிகிச்சை முறையும் ஆகும்.

எனவே, வருமுன் பாதுகாப்பது நல்லது. கல்லீரலை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டுமென்றால் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி முக்கியம். அதோடு மது அருந்தாமல் இருப்பது, உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவற்றை சரியான விகிதத்தில் வைத்திருக்க வேண்டும்.  

கல்லீரல் ஆரோக்கியத்திற்காக சில உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். சமையலுக்குப் பயன்படுத்தும் இஞ்சி, பூண்டு போன்றவை கல்லீரலுக்கு நன்மை செய்கின்றன. அதேபோல் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த மஞ்சளும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

கல்லீரலை பாதுகாப்புடன் வைத்துக்கொண்டால், அது என்றென்றும் நண்பனாகவே இருக்கும்.