போக்ஸோ சட்டம் என்பது என்னவென்று தெரியுமா?
வழக்கறிஞர் நிலா
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக போக்ஸோ சட்டம் The Protection of Children from Sexual Offences (POCSO) 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 18 வயதுக்குக் குறைவான ஆண், பெண் குழந்தைகள் இந்த சட்டத்திற்குள் வருவார்கள். பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், பாலியல் சீண்டல், ஆபாசப் படமெடுத்தல், ஆபாச படம் காட்டுதல், கெட்ட வார்த்தைகளை பேசுதல், பாலியல் அவதூறு போன்ற அனைத்தையும் பாலியல் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.
இந்த வழக்கை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டும். புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்குமூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை விசாரிக்க வரும் போலீஸ் கண்டிப்பாக போலீஸ் உடையில் வரக் கூடாது குறைந்த பட்சம் பெண் சப் இன்ஸ்பெக்டருடன் வர வேண்டும். குழந்தை எங்கே வைத்து புகாரளிக்க விரும்புகின்றதோ அங்கே அழைத்துச் செல்ல வேண்டும். ஏனென்றால் குழந்தையை பாதிப்பிற்குள்ளாக்கியது அவரது தந்தையாகவும் இருக்கலாம். பெண் குழந்தையாக இருப்பின் ஆண் மருத்துவர் சோதனை செய்ய கூடாது.
இரவு நேரத்தில் குழந்தையைக் காவல் நிலையத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது. குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மருத்துவப் பரிசோதனை, பெற்றோர் அல்லது உற்றோரின் முன்னிலையில் செய்யப்படவேண் டும். பெண் குழந்தை என்றால், பெண் மருத்துவர் செய்ய வேண்டும்.
பாலியல் வன்கொடுமை குற்றத்தைப் பொறுத்தமட்டில், குற்றம் நடந்தது என்று மனுதாரர் தரப்பு நிரூபிக்க வேண்டியதில்லை. தான் குற்றம் செய்யவில்லை என்று குற்றவாளியே நிரூபிக்க வேண்டும். பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் பெயரையும், அடையாளத்தையும் ஊடகங்கள் வெளியிடக்கூடாது.
எம்.நிலா B.Com., LLM (Hons.), Diploma in Prof. Counselling
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
சென்னை & மதுரை