மருத்துவர்கள்

நீர்க் கட்டிகள்… சாக்லேட் கட்டிகள்

  • டாக்டர் மாலா ராஜ், ஃபர்ம் மருத்துவமனை

ஒரு பெண் கருத்தரிக்க இயலாமைக்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றில், பிசிஓடி. எனப்படும் நீர்க்கட்டிகள் எண்டோமெட்ரியோசிஸ் எனப்படும் சாக்லேட் கட்டிகள் பற்றி விளக்குகிறார் மருத்துவர்.

திருமணம் முடித்த ஒரு வருடத்திற்குள் பெண் கருத்தரித்து விட வேண்டும் என்று ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஆசைப்படுவது இயல்பு. பொதுவாகத் திருமணம் முடித்து 3 வருடங்கள் வரையிலும் காத்திருக்கலாம் என்று சொன்னாலும், தம்பதியர் காத்திருக்க விரும்புவதில்லை. அதனாலே உடனடியாக பரிசோதனை செய்யவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

கருத்தரிக்க இயலாத காரணங்களில் முதன்மையானதாகவும், முக்கியமானதாகவும் இருப்பது நீர்க்கட்டிகள். பெண்களுக்கு கருப்பையின் இரு பக்கங்களிலும் ஓவரி என்று சொல்லக்கூடிய சினைப்பைகளில் சிறிய, சிறிய நீர்க்கட்டிகள் தோன்றுவது பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸீஸ் Poly Cystic Ovarian Disease (PCOD) என்று அழைக்கப்படுகிறது.

ஹார்மோன் விளையாட்டு

ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிலக்கு முடிந்த 14 முதல் 18 நாட்களுக்குள் கருமுட்டை வெளியே வருவது இயல்பாக நடைபெற வேண்டும். ஆனால், ஹார்மோன் சுரப்பு குளறுபடி காரணமாக பெண்களுக்கு மாதவிலக்கு நடைபெறுவதில் பல்வேறு மாற்றங்கள் உருவாகின்றன.

28 நாட்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய மாதவிலக்கு சிலருக்கு முன்கூட்டியே வருவதுண்டு, சிலருக்கு இரண்டு மாதங்கள் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரலாம். இந்த குளறுபடிகளை நிறைய பேர் இயல்பான விஷயமாக ஏற்றுக்கொள்கிறார்கள். அதனால், ஹார்மோன் சுரப்பு பெரும் மாற்றத்தை சந்திப்பதன் காரணமாக ஆண்மைத் தன்மை அதிகரிக்கிறது. மாதவிடாய் ரத்தம் அதிகமாக அல்லது மிகவும் குறைவாக வெளியேறுகிறது.  

இந்த பிரச்னை காரணமாக சினைப்பையில் சின்னஞ்சிறு நீர்க்கட்டிகள் தோன்றுகின்றன. கருமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளியேறுவதை இந்த நீர்க்கட்டிகள் தடுத்துவிடுவதால், கருத்தரிப்பு இயலாமல் போகிறது.

பிசிஓடி பிரச்னை இருப்பது ஒருசில பெண்களுக்கு உடலில் வெளிப்படையாகத் தெரிவதுண்டு. முகம், மார்பு, கை, கால்களில் ஆண்களைப் போன்று முடி வளர்ச்சி அடைகிறது. அதோடு உடல் எடை அதிகரிப்பு, அதிகப்படியான முகப்பரு, மருக்கள் ஏற்படவும் காரணமாகிறது. ஆண் ஹார்மோனாகிய டெஸ்டோஸ்ட்ரோன் அதிகம் சுரப்பதாலே தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சியும், மறைவிடங்களில் கருமையும் ஏற்படுகிறது.

சிலருக்கு நீர்க்கட்டிகள் கர்ப்பத்திற்கு தடையாக இருக்கிறது என்றாலும், நீர்க்கட்டி உள்ள பெண்களால் தாயாக முடியாது என்ற அர்த்தம் இல்லை. ஏனென்றால், நிறைய பெண்கள் நீர்க்கட்டி இருப்பது தெரியாமலே குழந்தைப்பேறு அடைந்திருக்கிறார்கள். இன்னும் சில பெண்களுக்கு குழந்தை பெற்ற பிறகே நீர்க்கட்டி பிரச்னை தெரிய வந்திருக்கிறது.

தற்போது நிறைய இளம் பெண்களுக்கு இந்த பிசிஓடி பிரச்னை தென்படுகிறது. இவர்களில் பெரும்பாலோர் வேலைக்குச் செல்லும் பெண்களாக இருக்கிறார்கள். ஆகவே, வாழ்க்கை முறை மாற்றம், வேலைப்பளு, மன அழுத்தம் போன்றவையும் பிசிஓடிக்கு காரணமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

எப்படி கண்டறிவது..?

மாதவிடாய் குளறுபடி இருக்கும்போதே மருத்துவரை அணுகினால் இந்த பிரச்னையை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்துவிட முடியும். சில பெண்கள் மிகவும் தாமதமாக பூப்படைகிறார்கள் அல்லது சிலர் மிகவும் சின்ன வயதிலேயே பூப்படைகிறார்கள். இவர்களும் மாதவிலக்கு பிரச்னை உள்ளவர்களும் திருமணத்திற்கு முன்னரே மருத்துவரை சந்தித்து ஆலோசனையும் பரிசோதனையும் செய்துகொள்வது மிகவும் நல்லது.

இந்த பிரச்னையை வெகு எளிதாக ஸ்கேன் செய்வதன் மூலம் கண்டறிந்து சினைப்பை நீர்க்கட்டிகளை உறுதிப்படுத்தலாம். ஹார்மோன் சோதனையும் செய்து கண்டறியலாம். இவற்றை அகற்றிய பிறகும் சிலருக்கு நீர்க்கட்டிகள் உருவாக வாய்ப்பு உண்டு. எனவே, வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பி.சி.ஓ.டி. பிரச்னை வரும் முன் காக்க வேண்டுமென்றால், மாதவிலக்கு பிரச்னையாகிறது என்றதுமே மருத்துவரை அணுகி சீர்செய்ய வேண்டும். உடல் எடை அதிகரிப்பு, தேவைக்கதிமாக முடி வளர்ச்சி தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து இந்த பிரச்னையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். சரிவிகித உணவு, தினமும் உடற்பயிற்சி, நல்ல தூக்கம் போன்றவை முக்கியம்.

சாக்லேட் கட்டிகள்

நீர்க் கட்டிகளைப் போலவே சாக்லேட் கட்டிகளும் கர்ப்பம் அடைவதற்கு பெண்களுக்குச் சிக்கலாக உள்ளது. கர்ப்பப்பைக்கு வெளியேயும் சின்ன சின்ன எண்டோமெட்ரியல் தசைகள் உருவாவதை எண்டோமெட்ரியாயோசிஸ் என்று அழைக்கிறார்கள். இதனால் கருமுட்டைகள் உருவாவது அல்லது வெளியே வருவது தடுக்கப்பட்டு கர்ப்பம் நிகழாமல் தள்ளிப்போகிறது.

எண்டோமெட்ரியாசிஸ் ஏற்படுவதற்கு மிகச்சரியான காரணங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை. அதேபோல் அறிகுறிகளும் பெரிதாக வெளியே தெரிவதில்லை. கருவுறுதலில் பிரச்னை என்பதற்காக பரிசோதனை செய்யும் போதே,  எண்டோமெட்ரியாசிஸ் எனும் சாக்லேட் கட்டிகள் இருப்பது தெரிய வரும்.

பொதுவாக மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு ரத்தம் அந்தரங்க உறுப்பு வழியே கீழ் நோக்கி வரும். ஆனால், சாக்லேட் கட்டிகள் கொண்ட பெண்களுக்கு டியூப் வழியாக கருப்பை சுற்றி இருக்கும் சுவர் மற்றும் தசைகளில் ரத்தம் செல்வதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, சினைப்பையில் உருவாகும் கருமுட்டை தரமாக இருப்பதில்லை.

இதனை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் மருந்துகள் மூலமே தீர்வு கண்டுவிட முடியும். தாமதமாக, வளர்ந்த நிலையில் கண்டறியப்படும் நேரத்தில் அகற்றுவதற்கான சிகிச்சை தேவைப்படுகிறது. அதேநேரம், இந்த அறுவை சிகிச்சைகளால் எவ்வித பாதிப்பும் பக்கவிளைவும் ஏற்படுவதில்லை என்பதுடன், குழந்தை உருவாகும் வாய்ப்பும் அதிகமாகிறது.

ஆகவே, மாதவிலக்கு விஷயத்தில் எந்த ஒரு மாறுபாட்டையும் குறைபாட்டையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவே வேண்டாம்.  

தொடர்புக்கு : 9952992618

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *