மருத்துவர்கள்

உணவு நச்சுக்களை வெல்லும் பழைய சோறு

வெ. தமிழழகன், பாரம்பரிய மருத்துவர்

உடல் நாம் வளர்ப்பது. உயிர் நம்மை வளர்ப்பது. இரண்டுக்கும் ஆதாரமாக இருப்பது உணவு. அந்த உணவில் நச்சுக்கள் தோன்றினால்,அது உடலையும் உயிரையும் பாதிக்கிறது. எனவே, உணவுப் பொருள்களில் உள்ள நச்சுக்களை பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொரு மனிதருக்கும் இருத்தல் அவசியம்.

தானிய வகையிலான உணவுப் பொருட்களில் நூறுக்கும் மேற்பட்ட வகையிலான பூஞ்சை காளான்கள் உருவாகின்றன. இந்த காளான்களில் மைகோடாக்சின்ஸ் (Mycotoxins) எனும் புற்றுநோயை உண்டாக்குகிற நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருட்கள் உள்ளன. நன்கு சமைக்கும்போதும் இந்த பூஞ்சை அழிவதில்லை என்பதுதான் கவனத்துக்குரிய செய்தி.

மூன்று வகை பாதிப்புகள்

ஆகவே நச்சுக்கள் இல்லாத நல் உணவு பயன்படுத்துவதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். நச்சு உணவுகளால் மூன்று வகை பாதிப்புகள் உண்டாகின்றன.

1. இன்டெக்ஸிகேஷன் (Intexicasion) என்பது கெட்டுப்போன உணவில் இருக்கும் ஸ்டாக்பைலோ காக்கஸ் எனும் பாக்டீரியாவால் உண்டாகும் பாதிப்பு.

 2. இன்ஃபெக்ஷன் என்பது கெட்டுப்போன உணவில் இருக்கும் ஷிகெல்லே பாக்டீரியா சிறுகுடல், பெருங்குடலுக்குள் நுழைந்து உருவாக்கும் பாதிப்புகள்.

 3. மேற்கண்ட இரண்டும் சேர்ந்த பாதிப்பினால் டாக்ஸிகோ இன்ஃபெக்ஷன் உண்டாகிறது. இதுதான் காலராவை உருவாக்குகிறது.

பாக்டீரியாக்களால் உணவில் ஏற்படும் நச்சுத்தன்மை வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கி தசை மற்றும் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை உருவாக்கலாம். இதுபோன்ற பாக்டீரியாக்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகம் தென்படுகின்றன. பாக்டீரியாக்கள் பாதித்த உணவை எடுத்துக்கொண்டவருக்கு சில மணி நேரங்களில் உதடுகள் காய்ந்து வறண்டு விடும். கண்களின் கருமணிகள் விரிவடைந்து பார்வை மங்கும். சிறுநீர் கழிவது குறைந்து மலச்சிக்கல் உண்டாகும். உடல் பலவீனப்படும்.

பொதுவாக உணவுப் பொருட்களிலுள்ள என்சைம்களே, அவற்றின் இயற்கை மாறுதலுக்கு காரணமாகி காய், கனிகளை அழுக வைக்கிறது. முட்டையை கெட்டுப் போகச் செய்கிறது.

உணவுப் பொருட்களில் என்சைம் பாக்டீரியா பூஞ்சனம் முதலியனவற்றால் பாதிக்காமல் இருக்க காற்று, ஈரப்பசை,உஷ்ணம் ஆகியவை 37 டிகிரி செல்சியஸ் தேவைப்படுகிறது. இது நம் உடலின் வெப்ப நிலை ஆகும். என்சைம்களும் நுண்ணுயிர்களும் மிகையான சூட்டில் நசியவும், மிகையான குளிர்ச்சியில் செயலிழக்கவும் செய்கின்றன.

நச்சு தரும் பாதிப்பு

உணவில் இருக்கும் பாக்டீரியாக்கள் தொண்டை, தோல், முடி ஆகியவற்றில் தொற்றிக்கொள்ளும். முடி உதிர்தல், எச்சில் துப்புதல் காரணமாக நோய்க்கிருமிகள் பரவுகின்றன. இந்த டாக்சின் நச்சு கலந்த உணவை எடுத்துக்கொண்டால் வாந்தி,  வயிற்றுப்போக்கு ஏற்படும்.

பொடுலிசம் என்ற நிலையை உண்டாக்கும் பாக்டீரியா மரணத்தை விளைவிக்கும் அளவுக்கு கொடூரமானது. இந்த பாக்டீரியாக்களுக்கு வீட்டில் சுகாதாரமற்ற சூழலும், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளுமே காரணமாக இருக்கிறது. இந்த உணவுப் பொருட்களை நன்றாக கொதிக்க வைத்து பயன்படுத்தினால் மட்டுமே பாக்டீரியா நசியும் சூழல் ஏற்படுகிறது. ஆஸ்பெர்ஜில்லஸ் இக்ப்ளேவஸ் என்ற பூஞ்சனம் கல்லீரலில் புற்று நோயை தோற்றுவிக்கிறது. எனவே, வீட்டில் தயாரிக்கப்படும் பாதுகாக்கப்பட்ட உணவையே உட்கொள்வது நலம்.

நீண்ட நாட்கள் குளிர் பதனப்பட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்ட மீன், முட்டை, இறைச்சி, காய்கறிகளை உண்பதால் உணவு நச்சாக மாறிவிடுகிறது. உணவு சமைக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் வகை கலப்படமாக இருந்தாலும் உடலுக்குத் தீங்கு உண்டாகிறது.

பொதுவாக இறைச்சி வகையினை நன்கு வேக வைத்து உண்ண வேண்டும். பப்பாளி காய்களை இறைச்சியுடன் சேர்த்து வேகவைத்தால், இறைஞ்சு பஞ்சு போல் வெந்து விடும். இதனால் இறைச்சி வகைகள் எளிதில் ஜீரணமாகிவிடும். பருகும் நீர் தூய்மையானதாக இல்லாவிட்டால், தொற்று கிருமிகள் பரவிவிடும். டைபாய்டு, டிப்தீரியா, காலரா போன்ற பாதிப்பினை உண்டாக்கிவிடும்.

நீராகார மகிமை

நீராகாரம் உட்கொள்வது வயிரோட்டம் போன்ற கடும் பாதிப்பை போக்குகிறது. நமது முன்னோர்கள்  சின்ன வெங்காயத்தை கடித்துக்கொண்டு நீராகாரத்தை உட்கொண்டு மிகுந்த ஆரோக்கியத்தை பெற்றனர். சின்ன வெங்காயத்துடன் நீராகாரம் உட்கொள்வதால் உடலில் உள்ள நுண்ணிய நச்சுக்கிருமிகள் அளிக்கப்படுகின்றன.  குடல் உறுப்புகள் வலிமையாகிறது. மேலும் இது உடலுக்கு நீர் சத்து அளிப்பதுடன் உடல் உஷ்ணத்தையும் தணிக்கிறது.

வயிரோட்டத்தை யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் வயிரோட்டத்தின் காரணமாக ஏற்படும் நீர் இழப்பானது மரணத்தையும் உண்டாக்கலாம். வயிரோட்டத்தின் போது நீர் இழப்பு ஏற்பட்டவர்களுக்கு அதிக தாகம் ஏற்படும். சருமம் தளர்ந்து சோர்ந்து போகும். நாக்கு உலர்ந்து காணப்படும்.  குழந்தைகளின் உச்சிக்குழி தாழ்ந்து விடும். கண்ணில் கண்ணீர் இல்லாமல் போகும். சரும பாதிப்பு தோன்றும் .உடல் குளிரும். சுவாசம் வேகமாகவும், இளைத்தும் காணப்படும் .சிறுநீரின் அளவு குறைந்து போகும். இத்தகைய பாதிப்புகள் உண்டாகும் போது அதன் அறிகுறி அறிந்து நீராகாரம் உட்கொண்டால் மேற்படி பாதிப்புகள் நீங்கும்.

ஆறு மாதங்களுக்கு குறைந்த வயது குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருப்பின் அடிக்கடி தாய்ப்பால் தரவேண்டும். புட்டி பால் குடிக்கும் குழந்தை என்றால் வளமையாக பால் கரைக்க எடுக்கும் நீரை போன்று இரு பங்கு நீரில் மாவை கரைத்து பாலை தயார் பண்ணி வழமை போன்று கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தொடர்ந்து எலுமிச்சம் பழச்சாறு, பழச்சாறு, இளநீர் மரக்கறி சூப், வறுத்த அரிசி கஞ்சி போன்ற நீராகாரங்களைக் கொடுக்க வேண்டும். 

இன்றளவிலும் கிராமத்தில் விவசாய தொழில் செய்யும் பலரும் வெறும் வயிற்றில் நீராகாரத்தை உட்கொண்டு விட்டு அதன் சக்தியால் கடுமையான உழைப்பினை மேற்கொள்கின்றனர். இவ்வாறு நீராகாரம் அருந்துவதால் களைப்பு நீக்கப்பட்டு சுறுசுறுப்பு உண்டாகிறது. பசிக்கு ஈடுகொடுக்கிறது. நீராகாரம் அருந்தி கடும் உழைப்பை மேற்கொள்வதன் காரணமாக உடல் கழிவுகள் வியர்வையாக வெளியேறி விடுகிறது. இதன் அருமை பெருமை புரிந்ததன் காரணமாக அமெரிக்காவில் நீராகாரத்துடன் கூடிய பழைய சோறு அமோக விற்பனையாகி வருகிறது.

குளிர்பான ஆபத்து

கோடை காலங்களில் உண்டாகும் தாக உந்துதலுக்கு குளிர்பானங்களை மக்கள் அருந்தி வருகின்றனர். அதில் ரசாயனம் கலக்கப்படுவதன் காரணமாக உடலுக்கு கெடுதியே மிகுகிறது. இந்த குளிர்பானங்களுக்கு பதிலாக நீராகாரம் அருந்துவதால் உடலின் வெட்கை தணிந்து தாகம், அதி தாகம் அடங்குகிறது .பழைய சோற்று நீராகாரத்தில் உள்ள நீர்ச்சத்துக்கள் தொடர்ந்து கோடை வெட்கையின் காரணமாக வெளியேறும் வியர்வையை ஈடு செய்து வறட்சி மிகாமல் பாதுகாக்கிறது. உடலின் தோல் வறட்சியை போக்கி சருமத்தை பாதுகாக்கிறது.

நீராகாரம் போலவே கொதிக்க வைத்த நீரை ஆற வைத்து பருகுவதால் ஜீரணக் கோளாறு உண்டாவதை தடுக்கலாம். நெடுநாள் தேக்கி வைத்த நீரை சுகாதாரமற்ற நிலையில் பயன்படுத்தினாலும் நோய் பரவும்.

உண்ணும் உணவில் நச்சுக்கள் இருந்தால் அதை உண்பவருக்கு நீர் இழப்பு ஏற்படும். ரத்தத்தில் சோடியம் பொட்டாசியம் சத்துக்கள் குறைந்து விடும். வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்படும். இத்தகைய பாதிப்பு அடைந்தவர்கள் குடிதண்ணீரில் உப்பும் சர்க்கரையும் கலந்து பருக வேண்டும். இதற்கு நம் முன்னோர்கள் எளிய மருத்துவமாக கருஞ்சீரகத்தை பனைவெல்லம் இட்டு காய்ச்சி கொடுத்து வந்தனர். இதனால் வாந்தி, மயக்கம், பேதி போன்ற  தொந்தரவுகள் அழியும்.

பழஞ்சோறு

சுடு அன்னத்தில் வாழைப்பழம் வெல்லம், நெய் ஊற்றி பிசைந்து வழங்கப்படும் சோறு வயிற்றுப்புண் ஆற்றும் .குடல் நோய் போக்கும். வலியை நீக்கும். இதை பழஞ்சோறு என்பர். பழைய சோறு என்பது மீந்த சோறில் நீர் விட்டு ஊற வைத்து புளிக்க வைப்பதாகும். பழைய சோற்று நீராகாரத்தை அப்படியே அல்லது மோரில் கலந்து சின்ன வெங்காயத்தை கடித்துக் குடித்து வர, வயிறு குளிரும். குடல் காயம் ஆறும். நச்சுக்கள் நீங்கும்.

அன்னம் என்பது உடல், உயிரை வாழ வைப்பது. ஆகவே, அவை நச்சுக் கலப்பின்றி சுகாதாரமாக எடுத்துக்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது.

தொடர்புக்கு : 9514583949

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *