மருத்துவர்கள்

இரட்டைக் குழந்தைக்கு ஆசையா..?

டாக்டர் பிரசிதா, கர்ப்பரட்சாம்பிகை ஃபெர்டிலிட்டி சென்டர், சென்னை

இயற்கையாக ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாவதற்கு, ஆயிரத்தில் 15 பேருக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரண்டு குழந்தைகளை ட்வின்ஸ் என்றும், மூன்று குழந்தைகளை ட்ரிப்ளெட்ஸ் என்றும் நான்கு குழந்தைகளை குவாட்ரப்ளெட்ஸ் என்றும் அழைக்கிறார்கள்.

Dr P. Prashitha MS (O&G)

சில மாதங்களில் பெண்ணுக்கு இரண்டு கரு முட்டைகள் வெளியாகலாம். இந்த இரண்டு கரு முட்டைகளில் இரண்டு விந்தணுக்கள் நுழையும்போது இரட்டைக் குழந்தைகள் உருவாகலாம்.  இயற்கை முறையில் உருவாகும் இரட்டையர்களில் 70 சதவிகிதம் இரண்டு கரு முட்டைகளால்தான் நிகழ்கிறது. பிறக்கும் குழந்தைகள் ஆண்களாக அல்லது பெண்களாக அல்லது ஆணும், பெண்ணுமாக இருக்கலாம். இவர்கள் ஒரே மாதிரி காட்சியளிக்கமாட்டார்கள்.  கருமுட்டையில் உயிரணு நுழைந்தபின்னர் சினைமுட்டையாக மாறும். இந்த சினைமுட்டையானது ஏதேனும் காரணங்களால் இரண்டாக பிரியும்போதும் இரட்டைக் குழந்தைகள் உருவாகலாம். 30 சதவிகித இரட்டையர்கள் இப்படித்தான் உருவாகிறார்கள். இவர்கள் ஒரே மாதிரி காட்சியளிப்பார்கள்.

அம்மா அல்லது சகோதரி இரட்டைக் குழந்தை பெற்றிருந்தால், அந்த குடும்ப பெண்களுக்கு இயற்கையாக  இரட்டைக் குழந்தை உருவாக அதிக வாய்ப்பு உண்டு. செயற்கை முறை கருவூட்டலுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கருமுட்டை வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் இவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கருத்தரிப்பு எளிதில் நிகழ்கிறது. டெஸ்ட் டியூப் பேபி முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட சினைக்கருவை பதியம் செய்து வளர்ப்பதால், இரட்டைக் குழந்தை கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டாகிறது.

எப்படி கண்டறியவது..?

வழக்கத்தைவிட வாந்தி, தலைசுற்றல் அதிகமாக இருந்தால், இரட்டைக் குழந்தையாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு. சராசரி கர்ப்பப்பையின் வளர்ச்சி வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதை வைத்தும் கண்டறியமுடியும். முன்கூட்டியே ஸ்கேன் செய்துபார்க்கும்போது தொப்புள் கொடி ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியே இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், முழுமையான ஸ்கேன் ரிப்போர்ட் எடுக்கவேண்டியது மிகவும் அவசியம்.  சில சமயங்களில் தானாகவே ஒரு குழந்தை கரைந்துபோவதுண்டு, இதனையும் ஸ்கேன் மூலம் அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.  பொதுவாக இரட்டைக் குழந்தைகள் விவகாரத்தில் காணப்படும் வளர்ச்சி குறைபாடு, ஒன்றையன்று நெருக்குதல் போன்றவைகளையும் ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும்.

கவனிக்கவேண்டிய தகவல்கள்

ஒற்றைக் குழந்தையை சுமப்பதைவிட கூடுதல் குழந்தை சுமக்கும்போது இதயத்துடிப்பு மற்றும் ரத்தஅழுத்த அளவு மாறுபடுகிறது. ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் மற்றும் பிளாஸ்மா புரோட்டீன் அளவு குறைவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.  ஹீமோகுளாபின் அளவு குறைவதால் கர்ப்பிணிக்கு அனீமியா ஏற்படுவதுடன் சுவாசக் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. கரு கலைந்து போவதற்கான வாய்ப்புகள் ஒற்றைக் குழந்தையைவிட, கூடுதல் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணிக்கு அதிகமாக இருக்கிறது.

கர்ப்ப காலத்தில் தொந்தரவு செய்யும் வாந்தி பிரச்னை வழக்கத்தைவிட மூன்று மடங்கு இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஹைபர்டென்ஷன் எனப்படும் உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதற்கும் 25 சதவிகித அதிக வாய்ப்பு உண்டு. அதேபோல் கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் இரண்டு முதல் மூன்று மடங்கு வாய்ப்பு உள்ளது.

37 வாரங்களுக்கு பிறகு குழந்தை பெற்றெடுப்பதே ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் முன்கூட்டியே பிரசவம் நேரிடுகிறது.  பொதுவாக சிசேரியன் மூலம் குழந்தைகளை எடுக்கவேண்டிய அவசியமே நேரிடும். முதல் குழந்தையை இயற்கை முறையில் பெற்றெடுத்தாலும் சிலருக்கு இரண்டாவது குழந்தைக்கு சிசேரியன் தேவைப்படலாம்.  பிரசவ நேரத்தில் முதலில் தொப்புள்கொடியும் பனிக்குடமும் வெளியேறும் சூழல் ஏற்பட்டு பிரசவத்தை சிக்கலாக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு. பிரசவத்தின்போது திறமைவாய்ந்த பிரசவகால அறுவை சிகிச்சை நிபுணரின் உதவி நிச்சயம் தேவைப்படும்.

தொடர்புக்கு :  044 2484 4718

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *